புதன், 12 மே, 2010

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! பேரா. இரா.மதிவாணன்-5

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா!
பேராசிரியர் இரா. மதிவாணன்
பகுதி ஐந்து
ஒரு மீன் சின்னத்தின் அருகில் ஆறு கோடுகள் இருந்தால் அறுமீன் – கார்த்திகை மீன் – முருகனைக் குறிப்பது என எகுபதிய பட எழுத்தைப் படிக்கின்ற பாங்கில் தன் ஆய்வை விரித்துரைக்கிறார். கடவுளுக்கு வணிக முத்திரை எதற்கு என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
மீன் வடிவத்தில் தலைமேல் ஒரு கூரை போன்ற தலைகீழ் வடிவத்தைக் கண்டு மைமீன் என்று அசுகோ பர்போலா படித்துக் காட்டுகிறார். கூரை வேய்தலை வேய்தல் என்பார்கள். அது மேய்தல் என்றும் திரியும். மேய்தல் வெறும் மேய் என நிற்கும். அது மை எனத் திரிந்து கருநிறத்தைக் குறிக்கும். மை மீன் என்று கரிய மீனாகிய சனிக்கோளைக் குறிக்கும் என்கிறார்.
வேய்(தல்) – மேய் – ஆதி மேய் – மை ஆகுமா? கூரை வேய்தலுக்கும் கருநிறத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? தமிழ் தெரிந்தவராகவும், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவராகவும் உள்ள ஐராவதம் மகாதேவனார் அசுகோ பர்போலாவின் ஆராய்ச்சிக் குறைபாடுகளை முழுமையாகக் காட்டவில்லை.
ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள் சிந்துவெளித் தமிழரின் உண்மை வரலாற்றைத் தெளிவாக உறுதிப் படுத்துவனவாக இல்லை என்பதே பலர் சிந்தனையிலும் நிழலாடும் கருத்தாக உள்ளது. சிந்துவெளி முத்திரையில் உள்ளவை மொழி எழுத்துக்கள் அல்ல வெறும் குறியீடுகள் என்று வெளிவந்த வெளிநாட்டுக் கட்டுரைகளை அசுகோ பர்போலாவும் ஐராவதம் மகாதேவனும் ஆணித்தரமாக மறுத்த கட்டுரைகள் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றன. ஆயினும் தமிழ் எழுத்து அசோகர் பிராமியிலிருந்து வந்தது, தமிழர்கள் வடக்கே இருந்து தெற்கே வந்தவர்கள் சிந்துவெளி எழுத்து வலமிருந்து இடமாக எழுதப்பட்டது போன்ற ஐராவதம் மகாதேவனாரின் கருத்துக்கள் அவருக்கும் தமிழுலகிற்கும் பெருமை சேர்ப்பனஅல்ல. தமிழுக்கு ஆக்கம் விளைப்பன அல்ல.
எனினும் சிந்துவெளி நாகரிக ஆய்வில் ஐராவதம் மகாதேவனாரின் உழைப்பு தந்துள்ள பயனை எவரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
கடந்த ஒரு நூற்றாண்டாக வடபிராமி தென்பிராமி கல்வெட்டுக்களைப் பற்றி ஏராளமான கட்டுரைகளும் நூல்களும் வெளிவந்துள்ளன. அவற்றை அலசி ஆராய்வதற்கு ஐராவதனார் பெரிதும் பாடாற்றி ஆய்வுப் புலங்களைப் பீடு பெறச் செய்திருக்கிறார். காடு மலை ஏறிக் கால்கடுக்க நடந்து ஊன்றிப் பார்த்தும், ஒற்றியெடுத்தும் எழுத்துப் பதிவுகளைச் சரிபார்த்த பேருழைப்புக்குத் தமிழுலகம் அவருக்கு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. அவரை எவ்வளவு போற்றினாலும் தகும். விரிவான தரவல்களை முறையாக ஆராய்ந்தாலும் முன்னைத் தமிழின் தொன்மை அளவீட்டைச் சரியாகச் செய்யவில்லை என்பதே தமிழுலகின் மனக்குறை.
கல்வெட்டு ஆய்வில் பலருக்கு ஊக்கம் பெருகப் பெரிதும் உழைத்திருக்கிறார் என்றாலும் தமிழின் உண்மை வரலாற்றுக்கு ஆக்கம் சேர்க்கவில்லை என்னும் மனக்குறை நீடிக்கத்தான் செய்கிறது.
மேற்கோள் குறிப்பு
1. I. Mahadevan, 2002, Presidential Address, IHC, Bhopal
2. Asko Purpola, Corpus of Indus Seals and Inscriptions
3. R. Madhivanan, 1995, Indus Script among Dravidian Speakers
4. மயிலை சீனிவேங்கடசாமி, 1981, சங்கக் காலப் பிராமி கல்வெட்டுகள்
5. R.Madhivanan 1995, Indus Script Among Dravidian Speakers
6. Indrapala, Is is an Indus Script. The Hindu.
7. R. Madhivanan 1995, Indus Script Among Dravidian Speakers
8. R. Madhivanan, 1995 Indus Script Among Dravidian Speakers
9. Rajan, 2004, Hero Stone, Puliman Kombai
10. நாராயணராவ் 1938, Brahmi Inscriptions of South India, The Men Indian Antiquary Vol.I, PP. 362 – 376
11. இரா. மதிவாணன், 2007, தமிழர் வரலாற்றில் புதிய பார்வைகள் (பக். 40- 48)
12. இரா. மதிவாணன், 2007, சிந்துவெளி எழுத்து படிப்பது எப்படி.
13. ஐ. மகாதேவன், ஆவணம் கட்டுரை
14. ஐ.மகாதேவன், சிந்துவெளிக் குறியீடுகள் மொழியின் எழுத்தே.
•••

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக