சனி, 24 ஏப்ரல், 2010

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா!

ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா!
பேராசிரியர் இரா. மதிவாணன்
சிந்துவெளி முத்திரைகள் முதலாக, பிரகிருதக் கல்வெட்டுக்கள், வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் வரை உலகறிந்த ஆராய்ச்சியாளராக விளங்குபவர் ஐராவதம் மகாதேவன் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. மாவட்ட ஆட்சியாளராகத் தொடங்கிய அவருடைய பணி கல்வெட்டு ஆராய்ச்சியை வாழ்விலக்காகக் கொண்டது; உலகளாவிய புகழ் கொண்டது.
சிந்துவெளி முத்திரைகளிலும் எழுத்துப் பொறிப்புக்களிலும் காணப்படும் சொல்லடைவுகளை முறைப்படுத்தி வெளியிட்டதும் தென்னகப் பிராமிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்து முந்தைய தமிழ்க் கல்வெட்டுக்களை வெளியிட்டதும், இவருடைய முதன்மையான வெளியீடுகள், எண்ணிறந்த ஆங்கிலக் கட்டுரைகள் உலகப் புகழ் தந்தன. தமிழில் இவர் எதுவும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. இவருடைய ஆய்வுகள் தமிழுக்கு வெறும் ஊக்கம் தந்தன. ஆக்கம் எதுவும் தரவில்லை. மாறாகத் தமிழ் வரலாற்றைத் தாக்குவனவாகவும் உள்ளன என்பது வெளிப்படை.
சிந்துவெளி எழுத்தாய்வுகள்
பின்லாந்து எல்சின்கி பல்கலைக்கழகத்துச் சிந்துவெளி ஆய்வாளர் அசுகோ பர்போலாவொடு இணைந்து இவர் எடுத்த முடிவுகளின் வண்ணம் சிந்துவெளி நாகரிகம் திராவிடர்க்குரியது1 என்பது பாராட்டத்தக்கது. ஆனால் சிந்துவெளி எழுத்து வலமிருந்து இடமாக எழுதப்பட்டிருக்கிறது என இவர்கள் எடுத்த முடிவு2 முற்றிலும் தவறானது. கடந்த ஒரு நூற்றாண்டாகச் சிந்துவெளி எழுத்து படிக்கப்படாததற்கு இந்தத் தவறான முடிவே காரணமாயிற்று. உடும்புப் பிடியாக இவர்கள் கொண்ட கோட்பாடு எத்தனை நூற்றாண்டாயினும் வெற்றிபெறப் போவதில்லை. ஒருசில முத்திரைகளை யேனும் படித்துக் காட்டியவர்களால்தான் எழுதப்பட்ட முறை வலமா! இடமா! என்பதை முடிவுகட்ட முடியும். ஒரு முத்திரையைக் கூட இவர்கள் ஒழுங்காகப் படித்துக் காட்டாமல் எழுதப்பட்ட திசை வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக உள்ளது என்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று.

பி.பி.இலால் என்னும் ஆய்வாளர் பானை ஓட்டிலுள்ள எழுத்தின் வீழ்கோடுகளைச் சில வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகப் படிந்துள்ளன எனக் கூறியதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு இவரும் இம்முடிவுக்கு வந்துள்ளார். இடதுகைப் பழக்கமுள்ளவன் கூட அப்படிக் கோடுகள் வரைந்திருக்க முடியும். இதனை ஒரு ஆணித்தரமான காரணமாகக் கொள்ள முடியாது. இது முதற்காரணமாக, சிந்துவெளி முத்திரைகளில் பெரிய எழுத்தாக எழுதத் தொடங்கி வரி இறுதியில் எழுத்து சிறுத்துப் போகிறது. எஞ்சிய எழுத்துக்களை வலப்பக்கத்து இறுதியில் கீழே எழுதியுள்ளனர். வலமிருந்து இடமாக எழுதியதால்தான் எஞ்சிய எழுத்தை வலப்பக்கத்து இறுதியில் எழுதியுள்ளனர் என்பதை இரண்டாம் காரணமாகக் காட்டியுள்ளனர். எழுத்துக்களை முத்திரைக் கல்லில் பொறிப்பவர்கள் பெரும்பாலும் கல்வியறிவு நிரம்பாத தொழிலாளர்களாக இருப்பது இயல்பு. ஆதலால் எஞ்சிய எழுத்தை எங்கே பொறித்துள்ளனர் என்பதைக் காரணமாகக் காட்ட முடியாது.
வட்டமாகப் பொறித்த முத்திரைகளில் சிறிய முத்திரை எழுத்துக்களில் தொடங்கிப் பெரிய எழுத்துக்களில் முடிந்த பாங்கு வல இடமாக உள்ளது என்னும் மூன்றாம் காரணமும் ஏற்கத் தக்கதன்று. பெரும்பாலான முத்திரைகளில் எழுத்துக்கள் சம உயரமுடையனவாக உள்ளன. எழுத்து பெருத்தும் சிறுத்தும் போவது எழுதுபவரின் கைப்பாங்கு. ஆதலால் இந்தக் காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.
ஆணித்தரமான சான்று
சிந்துவெளி முத்திரை எழுத்து இடமிருந்து வலமாக எழுதப்பட்டது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 5000 எழுத்துச் சான்றுகளைத் தமிழாகப் படித்துக் காட்டியுள்ளேன்,3 ஒரு மொழியில் எழுத்துக்களைத் திசை மாற்றி எவராலும் படிக்க முடியாது. சிந்துவெளி எண்களும் 115, 183, 2400 போன்று இடமிருந்து எண்மானமாக எழுதப் பெற்றுள்ளன. பெரிய எண்ணை முதலில் சொல்லி அடுத்த எண்ணை வரிசைப்படுத்திச் சிந்துவெளி நாகரிகக் காலத்திய இடமிருந்து வலமாக எழுதும் எண்ணுமுறை தமிழ்க் (தமிழ் பிராமி) கல்வெட்டுக்களிலும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதைக் கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு வாயிலாக நான் நிறுவியுள்ளேன். மயிலை சீனி. வேங்கடசாமியும் இவை எண் குறித்த குறியீடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
௫ அராபிய எண்கள் எனக் கருதப்பட்ட இன்றைய எண்கள் இந்திய எண்களே என அராபிய ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்திய எண்கள் எனக் குறிக்கப் பட்டுள்ள சிந்துவெளி நாகரிகக் காலத்திய வரிவடிவங்கள் திரிபுற்ற தமிழ் எண்களே என நான் நிறுவிக் காட்டியுள்ளேன்.
அரபி, உருது, பாரசீக மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படும் வடசெமித்திக் எழுத்து மரபைச் சார்ந்தவை. இம்மொழியில் எண்களுக்குரிய குறியீடுகளை முறைப்படி அவர்கள் வலமிருந்து இடமாகத்தான் எழுத வேண்டும். ஆனால் எல்லோரும் வியக்கும் வகையில் எண்களை மட்டும் இந்திய மொழிகளைப் போல் இடமிருந்து வலமாக எழுதுகின்றனர். இதன் காரணம் என்ன?­­­­
.....தொடரும்

1 கருத்து: